Skip to main content

‘5,000 முதல் 20 ஆயிரம் வரை மின் கட்டணம் கட்ட வேண்டும்’ - அதிர்ச்சியில் பொதுமக்கள் முற்றுகை!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

‘5,000 to 20 thousand electricity bills’ - Public siege in shock

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்கள் வீடுகளுக்கான மின் கட்டணத்தை ரிஷிவந்தியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கொண்டுவந்து செலுத்துவார்கள். இந்த அலுவலகம் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் முறையாக மின் கணக்கீடு செய்யாமல் அக்டோபர் மாதத்தில் தோராயமாக கணக்கீடு செய்து, ஒரு வீட்டுக்கு 5,000 முதல் 20 ஆயிரம் வரை மின் கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி கிராம மக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பயனாளிகள் கூறும்போது, “ஒவ்வொரு மாதமும் முறையாக மின் கட்டணத்தைக் கணக்கீடு செய்து தெரிவித்திருந்தால் நாங்கள் உடனுக்குடன் மின் கட்டணத்தை செலுத்தியிருப்போம். கடந்த ஆறு மாதங்களாக முறையாக மின் கட்டணத்தைக் கணக்கீடு செய்யாமல், அக்டோபர் மாதத்தில் மட்டும் தோராயமாக கணக்கீடு செய்து 5000 முதல் 20 ஆயிரம் வரை பணம் கட்டச் சொல்கிறார்கள். திடீரென இவ்வளவு மின்கட்டண தொகை செலுத்துமாறு கூறினால் பணத்திற்கு எங்கே போவது.

 

இந்தக் கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லை. அதனால் வருமானம் இல்லாமல் தவித்துவருகிறோம். இந்த நேரத்தில் இவ்வளவு பணம் கட்டச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது” என்று வேதனையுடன் கூறினார்கள். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மின்வாரிய செயற்பொறியாளர் கருணாநிதி ஆகியோர் பயனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகப்படியாக மின் கட்டணம் கட்டுமாறு கூறப்பட்ட பயனாளிகளிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அதனை உடனடியாக மாவட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.