Skip to main content

“தமிழகம் முழுவதும்  500 கலைஞர் உணவகம் திறக்கப்படும்” - டெல்லியில் அமைச்சர் சக்கரபாணி  

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"500 Kalaignar restaurants will be opened across Tamil Nadu" - Minister Chakrabani

 

தமிழ்நாட்டில் விரைவில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையலறை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (25.11.2021) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். 

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குடிமக்கள் பாதிக்கப்படும் நிலையைப் போக்கும்விதமாக இத்திட்டம் அமைந்தது. தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை குறிப்பாக சமூகத்தில் எளிதாக பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் இருந்துவருகிறது. இதில் மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக கடந்த 2007ஆம் ஆண்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு சிறப்பு வினியோகத் திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

அதன் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், 2 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூபாய் 978 கோடி செலவிலும், அதேபோன்று தலா 4,000 ரொக்கத் தொகையும் கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி மாதம் 21 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திவருகின்றன. இதில் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த உணவகத்தில் பயனடைகின்றனர் மற்றும் இதர பேரிடர் காலத்தில் இந்த உணவகங்களில் கட்டணங்கள் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது.

 

இது போல், வருங்காலங்களில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு உணவகத்தை நடத்த சராசரியாக மாதம் 3.5 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தவும் விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013இல் 100 விழுக்காடு நிதியுதவி வழங்கப்பட வேண்டும். புதிய உணவகங்கள் திறக்கப்பட்டாலும் தற்போது உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும். 

 

நெல் கொள்முதல் தீர்ப்பது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அமைச்சர், 19% ஈர்ப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். அதேபோல் மற்றொரு கோரிக்கையாக, தமிழகத்தில் அரைக்கப்படும் பச்சரிசியில் ஒரு லட்சம் டன்னை அருகில் உள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக ஒரு லட்சம் டன் புழுங்கலரிசியை வழங்கிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவைப் பட்டினி மற்றும் சத்துக்குறைவு இல்லாத நாடாக மாற்றுவதில் தமிழகமும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் என்றென்றும் துணை நிற்பார்கள். இந்த ஒன்றிய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் இவை அனைத்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.