சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வில்லிவாக்கம் டீச்சர்ஸ் கில்டு காலனி வழியாகத் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(50) என்பவர் அந்த இளம்பெண்ணை வழிமறித்துள்ளார். ‘நான் உன்னை காதலிக்கிறேன், என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று பிரகாஷ் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார். அப்போது, பிரகாஷ் இளம்பெண் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு, ‘நீ என்னை காதலித்தால் தான் செல்போனை திருப்பி தருவேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, இளம்பெண்ணின் தாயார் இதுகுறித்து ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஏற்கனவே அந்த இளம்பெண்ணின் குடும்பம் பிரகாஷ் வீட்டில் தான் வாடகைக்கு குடியிருந்தனர். அப்போது, பிரகாஷ் இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்க கூறி தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் இளம்பெண்ணின் குடும்பம் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்குச் சென்று குடியேறி விட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணை சாலையில் பார்த்தபோது மீண்டும் தொந்தரவு செய்துள்ளார் என்று தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் பிரகாஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, ராஜமங்கலம் காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.