Skip to main content

பெண்ணின் சாதுரியத்தால் தப்பித்த 50 பவுன் நகை..! 

Published on 28/08/2021 | Edited on 31/08/2021

 

50 pound jewelery saved by wife's cleverness

 

திருச்சி மாவட்டம், கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று முன்தினம் (26.08.2021) தன்னுடைய வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்குச் சென்றுள்ளார். திருமண நிகழ்வு முடிந்து நேற்று மாலை பாண்டியன், அவரது மருமகள் நந்தினி தேவி இருவரும் வீடு திரும்பியுள்ளனர். பாண்டியனின் மனைவியும் மகனும் மன்னார்குடியிலேயே இருந்துள்ளனர். வீடு திரும்பிய பாண்டியன், தனது வீட்டின் முன்பக்கக் கதவை சாவி போட்டு திறக்க முயன்றுள்ளார். ஆனால், கதவைத் திறக்க முடியவில்லை.

 

இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் பின்னால் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக் கிடந்தன. அதனைத் தொடர்ந்து பாண்டியன், திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

50 pound jewelery saved by wife's cleverness

 

அத்தகவலைத் தொடர்ந்து நீதிமன்ற காவல் நிலைய காவலர்கள், பாண்டியன் வீட்டிற்கு வந்து சோதனை செய்துள்ளனர். மேலும், பாண்டியனிடம் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளனர். அப்போது, பாண்டியன், தனது விட்டில் 50 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீஸார் 50 பவுன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தங்களது புகாரில் குறிப்பிட்டுக்கொண்டனர். 

 

இதற்கிடையில் பாண்டியனின் மனைவி பத்மாவதி, மகன் ஜெய ராஜேஷ் இருவரும் மன்னார்குடியில் இருந்து வீடு திரும்பினார்கள். வீடு திரும்பிய பத்மாவதி, நடந்த நிகழ்வுகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் வீட்டிற்குள் சென்ற சோதனையிட்ட பத்மாவதி, நகைகள் திருடு போகவில்லை என்றும் துணியில் சுற்றி பத்திரமாக இருப்பதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் பத்மாவதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், வெளியூர் சென்றதால் நகைகளைப் பாதுகாப்பாக துணியில் சுற்றி மறைத்து வைத்திருந்ததாகவும், அதனால் நகைகள் தப்பியதாகவும் கூறினார். ஆனால், மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சவரன் நகை மட்டும் திருடு போனதாக தெரிவித்துள்ளார். அதன் பின் இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ரோடு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.