ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்திருக்க மறுபுறம் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த அண்ணன் அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க பூர்வீக வீட்டை விற்க முயன்ற நிலையில், சகோதரர் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் இரண்டு லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தொழிலில் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்களது பூர்வீக வீட்டை விற்க வேண்டுமென தம்பி முத்துராஜிடம் நல்லதம்பி கூறியுள்ளார். இதற்கு அவரது தம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததே காரணம் எனக் கூறிய தம்பி, வீட்டை விற்க முடியாது எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அண்ணன் நல்லதம்பியை தம்பி முத்துராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பேசிக் கொள்ளலாம் எனக்கூறி காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பண்டாரம்பட்டி காட்டுப் பகுதியில் காரில் இருந்த நல்லதம்பியை வெளியே கொண்டு வந்து கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நல்லதம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட முத்துராஜ் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.