மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு தீர்ப்பை வழங்க இருக்கிறது. மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்பட கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் இது சாத்தியப்படுமா என கேள்வி எழுப்பியிருந்தது. மத்திய அரசு 26 சதவீத இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, 50 சதவீத இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி எதையும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்கள்.
இந்நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் அது எந்த மாதிரியான உத்தரவு என்பது நாளை மறுநாள் தெரிவிக்க இருக்கிறது உச்சநீதிமன்றம். எனவே இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.