Published on 05/10/2024 | Edited on 05/10/2024

கடலூர் மாவட்டம் சின்ன காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பரங்கிபேட்டையில் புதியதாக வாங்கிய நிலத்தை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பரங்கிபேட்டை சர்வெயர் நிர்மலா என்பவரிடம் மனு அளித்தார். அதற்கு அவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தராமல் இழுத்தடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து வெங்கடேசன் சர்வேயரிடம் கேட்டபோது 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத வெங்கடேசன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பெயரில் ரூ 5 ஆயிரம் லஞ்சமாக பெற்றபோது கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ( பொறுப்பு) டி.எஸ்.பி சத்யராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.