/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_281.jpg)
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் மதிர் விஷ்ணு(24). இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கரை அருகே பேருந்து சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேரில் ஒருவர், பேருந்தில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளிவிடுள்ளார். பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள்மணை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் விஷ்ணு தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்ணுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு கோகுல் என்ற நபரை விஷ்ணு தொடர்புடைய கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மதிர் விஷ்ணு சமீபத்தில் தான் பிணையில் வந்துள்ளார். இந்நிலையில் இவரை நோட்டமிட்ட கும்பல் தான் நேற்று பழிக்குப்பழியாக இக்கொலையை செய்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பழிக்குப் பழியாகத் தான் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதை போலீசார் உறுதி செய்து அதற்கான விசாரணையில் தீவிரம் காட்டி வந்தனர்.
இதற்கிடையில்தான் இந்த கொலை சம்பவத்தில் கடந்த 2013 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சகோதரர் ஆகாஷ் வயது 23, அவரது 17 வயது சகோதரர் ஒருவர், மணிமாறன்(22), 17 வயதுடைய 2 பேர் என மொத்தம் 5 பேர் தான் இந்த கொலை சம்பவத்தை அரங்கேறியது என்று இன்று காலை மணப்பாறை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். கோகுலை கொலை செய்த வழக்கில் நேற்று கொலை செய்யப்பட்ட மதிர் விஷ்ணு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் பிணையில் வெளி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் வசிக்கும் பகுதிக்கு சென்ற 4 பேர் மீண்டும் மிரட்டியதால் ஆத்திரமடைந்த ஆகாஷ் உள்ளிட்ட 5 பேரும் மதிர்விஷ்னுவை தீர்த்துக் கட்ட முடிவு செய்து நேற்று காலை பஸ்சில் பயணம் செய்தவரை தள்ளி விட்டு கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. பழிக்குப் பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)