ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளச் சந்தையில் மது விற்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த திமுக வார்டு உறுப்பினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தின் மூன்றாவது வார்டின் திமுக வார்டு உறுப்பினர் சதீஷ். இவர் அண்மையில் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் கள்ளச்சந்தையில் மது மற்றும் தவறான தொழில் செய்து வந்த லோக்கல் தாதா என்று அழைக்கப்படும் லோகேஸ்வரி என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக லோக்கல் தாதா என்றழைக்கப்படும் லோகேஸ்வரியை போலீசார் தேடிவந்த நிலையில், லோகேஸ்வரி, சதீஷ், ராஜேஷ், நவமணி, அன்பு ஆகிய ஐந்து பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது ஐந்து பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.