கோவையில் வைசியாள் வீதி அடுத்த கெம்பட்டடி காலனியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (62). கடந்த 30ஆம் தேதி இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாகக் குத்தி படுகொலை செய்யபட்டார். இவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.
இந்த நிலையில் இவர் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார், நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 சவரன் தங்க நகைகள், ஆட்டோ, கார், டூவிலர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திலக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்தக் கொலை குறித்து போலீசார், கெம்பட்டி காலணி நான்காவது வீதியைச் சேர்ந்த ரவி என்பவரது மனைவி லதா (எ) ராணி மளிகைச் சாமான்கள் வாங்க அடிக்கடி சென்று வரும்போது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் தனலட்சுமி தனியாக இருக்கும்போது லதா சிறு சிறு உதவிகள் செய்து வந்துள்ளார்.நாளடைவில் பழக்கம் அதிகரிக்க தனலட்சுமியிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பது லதாவிற்கு தெரிய வந்தபோது, லதா தன் தம்பி திலக்கிடம் தனலட்சுமி நிறைய பணம் வைத்திருப்பதாகக்கூறியுள்ளார்.
பட்டறை ஒன்றில் பணியாற்றி வரும் திலக், கடன் தொல்லையில் இருந்தது வந்துள்ளார். இந்நிலையில், திலக் தனது சகோதிரிகளான மாலா, லதா மற்றும் நண்பர்களான பீளமேடு பகுதியில் வசித்து வரும் செல்வம், மனோஜ்குமார், சத்தியசீலன் ஆகியோரை இணைத்துக்கொண்டு தனலட்சுமியின் வீட்டில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியுள்ளார்.
இதன்படி திலக் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒருமாதமாக தனலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளார். சம்பவ நாளன்று இரவு 9 மணியளவில் திலக் தனது நண்பரான செல்வத்துடன்தனலட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளார்.திலக், லதாவின் சகோதரர் என்பதால் இருவரையும் வீட்டினுள் தனலட்சுமி அனுமதித்து உள்ளார்.
அப்போது தங்களது திட்டம்படி விஷம் கலந்த இனிப்பை தனலட்சுமிக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். இதனைச் சாப்பிட்ட தனலட்சுமிக்கு சில நிமிடங்களில் தலை சுற்றல் ஏற்பட்டு உள்ளது.இனிப்பில் ஏதோ கலந்து தனக்கு கொடுக்கபட்டிருப்பதாக சந்தேகமடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த இருவரும் தனலட்சுமியின் தலையில் சரமாரியாக தாக்கியதில் தனலட்சுமி உயிரிழந்துவிட்டார்.பின்னர் வீட்டில் இருந்த 70 சவரன் நகையைக் கொள்ளையடித்து இருவரும் தப்பிவிட்டனர். தனலட்சுமியிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் உள்ளதாக லதா கூறியதின் பேரில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆனால் எதிர்பார்த்த பணம் இல்லாததால் கிடைத்ததை கொள்ளையடித்து ஐந்து பங்குகளாக பிரித்து உள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் லதா குடும்பத்தினர் நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.