
சேலம் அருகே, நிலத் தகராற்றில் அரசுப் பேருந்து ஓட்டுநரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன்கள் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த பாரப்பட்டி தொட்டியங்காட்டைச் சேர்ந்த குழந்தைவேல் (55). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர் சேலம் எருமாபாளையம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் குழந்தைவேல், தான் புதிதாகக் கட்டி வரும் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளில் கடந்த திங்கள்கிழமை (ஜன.30) ஈடுபட்டிருந்தார்.
அப்போது, உறவினரான சின்னசாமி (62), அவருடைய தம்பி ராஜா (48), சின்னசாமியின் மகன்கள் கணேஷ் (38), பாண்டி என்கிற சுரேஷ் (31), தினேஷ் (28) ஆகியோர் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தைவேலை மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தைவேலை, அங்கிருந்தவர்கள் மீட்டுச் சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மல்லூர் காவல்நிலைய காவல்துறையினர் சின்னசாமி மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தைவேல் சிகிச்சை பலனின்றி ஜன. 31ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.