
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கோவில் பத்து தெருவைச் சேர்ந்த குமார். இவரது மகன் லெஃப்ட் என்கிற பிரவீன் ராஜ் (23). சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் பிரவீன் ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரின் திருமணத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கிருந்த அவர், சந்தைதோப்பு பகுதியில் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மணிகண்டன் என்பவர் பைக் மீது மோதி உள்ளார். இதனால் மணிகண்டன் தரப்பினர், வாகனம் சேதம் அடைந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு உள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களான சிவராஜ், செந்தில் குமார் ஆகியோரை பிரவீன் ராஜ் தாக்கி கத்தியால் கிழித்துக் விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மணிகண்டன் தரப்பினர் கடந்த 6 ஆம் தேதி பிரவீன் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர். அப்போது பணியில் இருந்த ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் மற்ற போலீசார் புகாரை பெறாமல் அலச்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (11-06-25) மதியம் பிரவீன் ராஜ் அவரது தெரு அருகில் மது அருந்தி உள்ளார். அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த மணிகண்டன் தரப்பினர் 7 பேர் கொண்ட கும்பல், பிரவீன் ராஜை கத்தி மற்றும் கம்பிகளை கொண்டு தலை, கழுத்து, கால் பகுதியில் தாக்கி உள்ளனர். இதில், பிரவீன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார், உள்ளிட்ட போலீசார், பிரவீன் ராஜின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதே பகுதியில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளிகளான திரோபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (21), கள்ளத்தெருவைச் சேர்ந்த சிவராஜ் (21), செந்தில்(22), சந்தை தோப்புவைச் சேர்ந்த சக்திவேல்(19), ஞான வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கவியரசு (20) ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று பிரவீன் ராஜின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள், உடலை போலீசார் பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரத்த காயமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், தனி பிரிவு உதவி ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.