Skip to main content

சதுரங்க வேட்டை பட பாணி... ரூபாய் ஐந்து லட்சம் மோசடி... திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

Published on 06/02/2020 | Edited on 06/02/2020


 

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் சாமிநாதன். சந்தையில் ஆடு விற்பனை செய்யும் ஏஜெண்டாக இருந்து வருகிறார்.
 

 இவரிடம் திருப்பூரை சேர்ந்த மூன்று பேர் கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருக்கிறது. அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சதுரங்கவேட்டை பட பாணியில் ஆசைவார்த்தை கூறி உள்ளனர். 

 

tirupur


 

இரிடியம் வேண்டுமென்றால் ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும். முன்பணமாக ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியதை நம்பிய சாமிநாதன் ஐந்து லட்சத்தை முன்பணமாக மூன்று பேரிடம் கொடுத்துள்ளார். 
 

இந்த நிலையில் சாமிநாதனிடம் பணம் வாங்கியவர்கள் ஒரு காரில் பெரியநாயக்கன்பாளையம் வந்துள்ளனர். சாமிநாதனுக்கு போன் செய்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தற்போது கையில் இருப்பதாகவும், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வந்து மீது ரூ.20 லட்சத்தை தருமாறு சாமிநாதனிடம் கேட்டுள்ளனர். 
 

நேரில் வந்த சாமிநாதனுக்கு அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் வர உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காரில் இருந்த மூன்று பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரிடியம் என்று கூறி ஏமாற்றிய வெள்ளி குடத்தை பறிமுதல் செய்தனர். அந்த குடத்தில் ஆற்று மணல் நிரப்பி அவர்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. 


 

மேலும் விசாரணையில் அவர்கள் திருப்பூர் குமாரசாமி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்கிற பந்தா ஆறுமுகம், சோமனூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் தனபால், திருப்பூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த ராஜா என்பதும் தெரியவந்தது.
 

 இதில் ஆறுமுகத்துக்கு சொந்தமான கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் திருப்பூரில் திமுக விவசாயிகள் பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மேலும் கைதான 3 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது. 

Next Story

“பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

CM MK Stalin proudly says The time has come when women rule the world

 

திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையம், அவிநாசி-மங்கலம் சாலையில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.11.2023) காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மேலும் புதிதாகக் கட்டப்படவுள்ள தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

 

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஒரு காலத்தில் கல்வி என்பது எல்லாருக்கும் எளிதாக கிடைத்து விடவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஏராளமான போராட்டங்கள் இருக்கிறது. நீதிக்கட்சிக் காலத்திலிருந்து சமூகநீதியை வலியுறுத்தி வருகின்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களால்தான் இந்த மாற்றம் சாத்தியமானது. பெருந்தலைவர் காமராசர் பள்ளிக் கல்வியை ஊக்கப்படுத்தினார். அதை கல்லூரிக் கல்வியாக கலைஞர் விரிவுபடுத்தினார். திரும்பிய பக்கம் எல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால்தான், இன்றைக்கு வீடுகள் தோறும் பட்டதாரிகள் வலம் வருகிறார்கள்.

 

இன்னொரு பக்கம் சமூக அமைப்புகளும், சேவை மனப்பான்மையோடு பள்ளி கல்லூரிகளைத் தொடங்கினார்கள். அதனால்தான் கல்வி நீரோடை தடங்கல் இல்லாமல் நாடு முழுவதும் பாய்கிறது. இந்தக் கல்வி வாய்ப்பை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாகப் பெண் பிள்ளைகள், கல்லூரிக் கல்வி உயர் கல்விகள் என்று நிறைய படிக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்குத்தான் அரசு பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு திராவிட மாடல் ஆட்சியில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம். பெண்களுக்கு விடியல் பயணம் என்று கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.

 

CM MK Stalin proudly says The time has come when women rule the world

 

என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும் மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்க வேண்டும். நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடையவேண்டும். பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் எல்லாம் மலையேறி சென்றுவிட்டது. பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது” எனப் பேசினார்.

 

CM MK Stalin proudly says The time has come when women rule the world

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.