Skip to main content

எடப்பாடிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட பதிவுத்துறை உதவியாளர் வீட்டில் 5 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் சிக்கின

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

 

5 lakhs in cash and property documents were found in the house of a registry assistant known to be close to Edappadi!


சேலம் பத்திரப்பதிவுத்துறை ஊழியர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், அவருடைய வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

சேலம் இரும்பாலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் காவேரி (வயது 58). இவர், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு சரக பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். 

 

வருமானத்தைவிட 200 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில், அக். 11- ஆம் தேதி காலை அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 

 

காலை 08.00 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 9 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து 20 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவருடைய மனைவி சாந்தி பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டதற்கான சில ஆவணங்களும் சிக்கின. மேலும், 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கைப்பற்றினர். 

 

காவேரியின் வங்கி கணக்குகள், அவருடைய குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளம்பிள்ளையில் உள்ள அவருடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 

 

சேலத்தில் பல இடங்களில் வீடுகள், நிலங்களை தனது பெயரிலும் குடும்பத்தினர், பினாமிகள் பெயரிலும் வாங்கி போட்டிருப்பதாகச் சொல்கின்றனர். 

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர்தான் இந்த காவேரி. மாஜி விவிஐபிக்களுக்கு சேலத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்துகளை காவேரிதான் முன்னின்று பதிவு செய்து கொடுத்துள்ளார். 

 

இதனால் ஏற்பட்ட அறிமுகத்தால் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குள் முன்அனுமதி பெறாமலேயே எப்போது வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அதிகாரம் பெற்றிருந்தார். அதிகார மட்டத்தில் இருப்போருடன் வலம் வந்ததால்,  பத்திரப் பதிவுத்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளே கூட இவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலையில் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, மாஜி விவிஐபிக்களுக்கு பினாமியாக இருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.