சேலம் அருகே, மின்னல் தாக்கி பலியான சிறுவனின் பெற்றோருக்கு திமுக இளைஞர் நல அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள என்.மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ். விசைத்தறித் தொழிலாளி. இவருடைய மகன் கோகுல்குமார் (12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப். 29ம் தேதி வீட்டின் மாடியில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தார்.
இந்நிலையில், திமுக இளைஞர் நல அறக்கட்டளை சார்பில் சிறுவனின் பெற்றோருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறுவனின் வீட்டிற்குச் சென்று மகனை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். சிறுவனின் பெற்றோரிடம் நிதியுதவித் தொகையை வழங்கினர்.
இந்த நிகழ்வின்போது, சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமாசங்கர், நெசவாளர் அணி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறுவனின் பெற்றோருக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.