Skip to main content

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ஐந்தரை லட்சம் பணம் மோசடி!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
rupees 2000

 

மகனுக்கு ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரிடம் ஐந்தரை லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (66). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கார்த்திகேயன், பி.எட். பட்டம் படித்துள்ளார்.

 

இவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த இவரது நண்பர் மகேந்திரன் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஆறுமுகத்தைச் சந்தித்து எந்தெந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்பது எனக்குத் தெரியும் ஒன்றரை லட்சம் கொடுத்தால் காலியாக உள்ள இடத்தை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து கண்டறிந்து உங்களுக்குக் கூறுவேன். அதன் பிறகு காலியாக உள்ள பள்ளி ஆசிரியர் பணிக்கு பணத்தைக் கொடுத்து கார்த்திகேயனுக்கு வேலை வாங்கி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

இதை நம்பிய ஆறுமுகம் மகேந்திரனிடம் ஒன்றரை லட்சம் பணம் கொடுத்துள்ளார் அதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள குணமங்கலம் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது அப்பள்ளியின் தாளாளர் கலிபத்துல்லாவிடம் இதுகுறித்து பேசிவிட்டேன். அவரையே உங்களிடம் நேராக அழைத்து வருகிறேன். அந்த ஆசிரியர் வேலைக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை அவரிடமே பேசி முடிவு செய்யலாம் என்று மகேந்திரன் கூறியுள்ளார். மகேந்திரன் கூறியது போலவே அந்தப் பள்ளி தாளாளர் கலிபத்துல்லாவை மகேந்திரன் ஆறுமுகத்திடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி உள்ளார். அப்போது கலிபத்துல்லா ஆறுமுகத்திடம் தமது பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணி தங்கள் மகன் கார்த்திகேயனுக்கு கிடைக்க வேண்டுமானால் 6 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் அந்தப் பணியை கார்த்திகேயனுக்கு வழங்குவதாக கலிபத்துல்லா பேரம் பேசியுள்ளார். பள்ளி தாளாளரே நேரடியாக வந்து பணம் கொடுத்தால் வேலை என்று கூறியது ஆறுமுகத்திற்கு பெருத்த சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

 

அதன்படி கடந்த 2012-ஆம் ஆண்டு 4 லட்ச ரூபாயை மகேந்திரன் முன்னிலையில் கலிபத்துல்லாவிடம் ஆறுமுகம் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஒன்றரை லட்சம் கொடுத்ததையும் சேர்த்து மொத்த பணம் ஐந்தரை லட்சம், வேலை கிடைத்தவுடன் மீதி 50,000 தருவதாகக் கூறியுள்ளார் ஆறுமுகம்.

 

வேலை கிடைக்கும் வரை அதற்கு அத்தாட்சியாக கலிபத்துல்லாவிடம் பிராமிசரி நோட்டில் எழுதி வாங்கிக் கொண்டுள்ளார் ஆறுமுகம்.

 

அதன்பிறகு சில மாதங்களுக்குப் பிறகு அப்பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என ஆறுமுகத்திற்கு தெரியவந்துள்ளது மகேந்திரனும் பள்ளி தாளாளர் கலிபத்துல்லாவும் தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளனர் என்பது தெரியவந்தது.

 

http://onelink.to/nknapp

 

இதனையடுத்து ஆறுமுகம் தான் கொடுத்த ஐந்தரை லட்சம் பணத்தைத் திருப்பித் தருமாறு மகேந்திரன் மற்றும் கலிபத்துல்லா ஆகிய இருவரிடமும் பலமுறை அவர்களைத் தேடிச் சென்று கெஞ்சி கேட்டுள்ளார். இருவரும் பணத்தைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வேறு வழியில்லாமல் ஆறுமுகம் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் மகேந்திரன் மற்றும் கலிபத்துல்லா ஆகிய இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். ஆறுமுகம் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி தாளாளரே ஆசிரியர் பணி தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தகவல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; அலறும் அரசுத்துறை அலுவலர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.

தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை  தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம்  விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார். 

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எஸ்.டி, எஸ்.சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு... லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

Published on 03/12/2021 | Edited on 04/12/2021

 

bribe

 

பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் பத்து விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.