சேலத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபரையும் கைது செய்தனர்.
சேலம் ரயில்வே காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜூன் 24), தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஏறி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அவருடைய பெயர் மோத்தி நாயக் (25) என்பதும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அவர் பண்டல் பாண்டலாகக் கட்டி, கடத்தி வந்துள்ளார்.
ஒடிசாவில் இருந்து ஜோலார்பேட்டை வருவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால், அதே ரயிலில் கஞ்சாவை சேலத்திற்கு கடத்தி வந்திருப்பதும், இங்குள்ள சில தரகர்களிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோத்தி நாயக்கை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.