Skip to main content

நண்பர்களுடன் விளையாடிய போது விபரீதம்; 4 ஆம் வகுப்பு மாணவன் பலி

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

4th student passed away in Gobichettipalayam due to electric shock

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளப்பாளையம், டெலிபோன் நகர், விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜனனி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், சாய் தர்ஷன் (9) என்ற மகனும் உள்ளனர். இதில் சாய் தர்ஷன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

 

இந்நிலையில் நேற்று இரவு சாய் தர்ஷன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே மின் கம்பம் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது சாய் தர்ஷன் விளையாடும் போது மின் கம்பத்தில் இருந்த ஸ்டே ஒயரை பிடித்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சாய் தர்ஷனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த சாய் தர்ஷனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சாய் தர்ஷன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். பின்னர் மாணவனின் உடலை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். 

 

இது குறித்து தகவல் அறிந்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் மாணவனின் வீட்டுக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவனை மின்சாரம் தாக்கிய போது அந்த பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. பின்னர் மின் ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர். மின்சாரம் பாய்ந்து 4 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்