வடையால் வளர்ந்த கடையில் 4 ஆம் ஆண்டு வடை தினம்!

4th Annual Vada Day celebrate Cuddalore

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரது கடையில் விற்பனை செய்யப்படும் வடையை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்து வாங்கிச் சென்றுள்ளனர்.

அப்படி வடையை விற்று வளர்ந்த கடை இன்று சண்முகவிலாஸ் என்ற பெரிய ஸ்வீட் கடையாக வளர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இந்தக் கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் உயிரிழந்தார். இதனையடுத்து டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமையில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வடையால் வளர்ந்த கடையின் நிறுவனர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வடை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வடை தினத்தில் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு வடையை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டுகடந்த (டிச.02) சனிக்கிழமை 4-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கடையின் வாயிலில் வடைதினம் அனுசரிக்கப்பட்டது. வடைதினத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ரூ 7 மதிப்புள்ளஒரு வடை இலவசமாக 11 ஆயிரம் வடைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஒருவர் எத்தனை வடை வேண்டுமானாலும் அதே இடத்தில் சாப்பிடலாம். ஆனால், பார்சல் எடுத்துப்போக அனுமதி இல்லை.

இந்நிகழ்ச்சியில், கடையின் உரிமையாளர் கணேஷ் மற்றும் கடையின் ஊழியர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வடைகளைவழங்கினார்கள். இதனையறிந்த சிதம்பரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் சிவராம வீரப்பன், முரளி, அப்துல்ரியாஸ், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தோப்பு சுந்தர், சுரேஷ் உள்ளிட்ட நகரின் முக்கியப் பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இப்பகுதி மக்களால் இந்தக் கடை, வடையால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. அவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் எவ்வளவு செலவு ஆனாலும் இலவசமாக வடையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe