Skip to main content

வடையால் வளர்ந்த கடையில் 4 ஆம் ஆண்டு வடை தினம்!

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

4th Annual Vada Day celebrate Cuddalore

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரது கடையில் விற்பனை செய்யப்படும் வடையை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்து வாங்கிச் சென்றுள்ளனர்.

 

அப்படி வடையை விற்று வளர்ந்த கடை இன்று சண்முகவிலாஸ் என்ற பெரிய ஸ்வீட் கடையாக வளர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இந்தக் கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் உயிரிழந்தார். இதனையடுத்து டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமையில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வடையால் வளர்ந்த கடையின் நிறுவனர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வடை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வடை தினத்தில் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு வடையை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

 

இந்த ஆண்டு கடந்த (டிச.02) சனிக்கிழமை 4-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கடையின் வாயிலில் வடைதினம் அனுசரிக்கப்பட்டது. வடைதினத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ரூ 7 மதிப்புள்ள ஒரு வடை இலவசமாக 11 ஆயிரம் வடைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஒருவர் எத்தனை வடை வேண்டுமானாலும் அதே இடத்தில் சாப்பிடலாம். ஆனால், பார்சல் எடுத்துப்போக அனுமதி இல்லை.

 

இந்நிகழ்ச்சியில், கடையின் உரிமையாளர் கணேஷ் மற்றும் கடையின் ஊழியர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வடைகளை வழங்கினார்கள். இதனையறிந்த சிதம்பரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் சிவராம வீரப்பன், முரளி, அப்துல்ரியாஸ், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தோப்பு சுந்தர், சுரேஷ் உள்ளிட்ட நகரின் முக்கியப் பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

இப்பகுதி மக்களால் இந்தக் கடை, வடையால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. அவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் எவ்வளவு செலவு ஆனாலும் இலவசமாக வடையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.