Skip to main content

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் 47 பேருக்கு பீரோ வாங்கி கொடுத்து அசத்திய கிராம மக்கள்!!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராம மக்கள் அரசு தொடக்கள் பள்ளியில் பருவத் தேர்வுகளிலும் வருகைப் பதிவு அடிப்படையில் 47 மாணவர்களை தேர்வு செய்து பீரோக்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

 

47 students from government elementary school bought bureau


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த 3 பேர் மருத்துவர்களாகவும், பலர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பலதுறை அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ள நிலையில் பள்ளிக்கு அரசு ஆசிரியர்கள் 4 பேருடன் கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு ஆசிரியர்கள், 5 கணினி போன்ற வசதிகளும் உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி அறிவியல் ஆய்வுகள், விளையாட்டு போட்டிகளிலும் மாநில அளவில் சாதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிதம்பரவிடுதி பகுதியில் இருந்து சுமார் 50 மாணவ, மாணவிகள் பல ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வேன்கள் மூலம் சென்று வருகின்றனர். அதனால் அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரவும் அரசு பள்ளியை தரம் உயர்த்தவும் திட்டமிட்ட முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன் கடந்த 2018 ம் ஆண்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் போல அரசு பள்ளி மாணவ, மாணவிகளும்  பள்ளிக்கும், வீட்டுக்கு சென்று வர கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் இணைந்து வேன் வாங்கி கொடுத்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பாடங்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், வருகை பதிவு, அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு பெற்றோர் ஆசிர்யர் கழக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறாரா என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை 19 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்கள். அதேபோல 2019 ம் ஆண்டு டேபிள் மேட் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டுக்கான ஆண்டுவிழா நேற்று சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச் செல்வம் தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை, ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிமாறன், செரியலூர் ஜெமின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குழ.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்த  விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை சந்திரா வரவேற்றார். 

 

47 students from government elementary school bought bureau


முதல் வகுப்பு மாணவி அகிலாஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வியக்க வைத்தார். தொடர்ந்து நடந்த விழாவில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் பருவத் தேர்வுகள், பள்ளி வருகை பதிவு, பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை ஆகியவற்றை ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 47 மாணவ, மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் வழங்கிய பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சதுரங்கப் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் சாதித்த மாணவர்கள், மற்றும் கல்வி, விளையாட்டு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை பாpசு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் பள்ளி ஆசிரியர் அருண் நன்றி கூறினார். கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து அரசுப் பள்ளியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், வெளிநாடு வாழ் தொழிலதிபர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அசத்தி வருவதால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதுடன் மாணவர்களின் கல்வித் திறனும், விளையாட்டு, கலை திறன்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.