கோவை மாநகர காவல்துறை சார்பில் மாநகர் முழுவதும் இதுவரை 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டுக்கு பிறகு 50 முதல் 60 சதவீத குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் கோவை மாநகர காவல்ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

Advertisment

kovai

கோவை காந்திபுரம் காட்டூர் காவல்நிலையம் சார்பில் சுமார் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான நவீன கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் உதவி மையம் இன்று திறக்கப்பட்டது. காந்திபுரம் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டு மையத்தை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் திறந்து வைத்து கேமராக்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

Advertisment

 4600 CCTV cameras in Coimbatore Municipality...

அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சிசிடிவி கேமரா என்பது மூன்றாவது கண்ணாக பார்க்கப்படுவதாகவும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பெருவாரியான குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இதன்மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்படுவதாகவும், விபத்து சம்பவங்களின் போது அதன் தன்மை அறிய எளிதாக இருப்பதாகவும் கூறியதுடன் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக சிசிடிவி கேமராக்கள் திகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவை மாநகரில் காவல்துறை சார்பில் சுமார் 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதாகவும் அடுத்த மூன்று மாதத்திற்குள் மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தலா 50 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு மாநகரில் 50 முதல் 60 சதவிகித குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் அண்மையில் தனியார் தங்கநகை பைனான்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Advertisment