Skip to main content

460 கிலோ கஞ்சா கடத்தல்- 2 பெண்கள் உள்பட 9 பேர் மீது வழக்கு!

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

cannabis

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பின்னவாசல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு தோட்டத்தின் அருகே ஒரு லாரியும் ஒரு சரக்கு மினி லாரியும் நீண்ட நேரம் நிற்பதை பார்த்து ஆடு திருடும் கும்பல் வந்திருப்பார்களோ என்று சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த இரு வாகனங்களையும் வாகன ஓட்டிகளையும் பிடித்து வைத்துக்கொண்டனர். பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் பல மணி நேரத்திற்கு பிறகு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணையைத் தொடங்கினர்.

 

விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னதால் வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை செய்த போது தாங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்த கஞ்சா பண்டல்களை பின்னவாசல் முத்துத்துரை மகன் சிதம்பரம் (48) வீட்டில் இறக்கிவிட்டு வந்ததாகக் கூற, அதிர்ச்சியடைந்த போலீசார் சிதம்பரம் வீட்டிற்குச் சென்று கஞ்சா பண்டல்களை மீட்டு சிதம்பரத்தையும் கைது செய்து அழைத்து வந்தனர்.

 

மேலும் விசாரிக்க, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பற்றி வந்த லாரியின் பிளாட்பாரத்தில் ஒரு ரகசிய அறை அமைத்து அதில் பல மூட்டை கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரிந்தது. இந்த தகவல் தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியாவுக்கு கிடைக்க நேற்று இரவு வந்த எஸ்.பி டீம் அந்த பிளாட்பாரத்தை கழற்றிப் பார்த்த போது பண்டல் பண்டலாக கஞ்சா அள்ளப்பட்டது.
 

cannabis

 

சுமார் 460 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் பலமணி நேரம் நடத்திய விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த ராம் பாபுவிடம் இருந்து திருச்சி குமார் ( பிறகு தேனி மாவட்டம் குமார் என்று கூறியுள்ளனர்) மொத்தமாக வாங்கி லாரியில் அனுப்புவார் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று சில்லறை வியாபாரிகளுக்கு கொடுப்பதும் தெரிய வந்தது.

 

இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக லாரி உரிமையாளரும் ஓனருமான தேனி மாவட்டம் உத்தமபாளையம் கருமாரியும், படையப்பா (24), பேராவூரணி பின்னவாசல் சிதம்பரம் (48), மதுரை திருமங்கலம் ஆலங்குளம் ரமேஷ்குமார் (39), பேராவூரணி பூக்கொல்லை எம்ஜிஆர் நகர் செல்வராஜ் (60), பேராவூரணி அண்ணாநகர் கணேசன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஆந்திரா மாநிலம் ராம்பாபு, தேனி மாவட்டம் குமார், பேராவூரணி அன்னக்கிளி, பூக்கொல்லை மங்கலம் ஆகிய நான்கு பேர் உட்பட 9 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இந்த சம்பவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.