Skip to main content

சேலம் அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை... நிர்வாண நிலையில் சடலம் வீச்சு!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

45 year old man body found near salem, ayotipatinam railway gate

 

சேலம் அருகே, கூலித் தொழிலாளியை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டு, ரயில் தண்டவாளம் அருகே நிர்வாண நிலையில் சடலத்தை வீசிவிட்டுச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

 

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட்டை ஒட்டியுள்ள தண்டவாளம் அருகில் சுமார் 45 வயதான அடையாளம் தெரியாத ஆண் சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாக, வியாழக்கிழமை (நவ. 11) காலை ரயில்வே காவல் நிலையத்திற்குத் தகவல் தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் (பொ), எஸ்.ஐ. சந்தானம் உள்ளிட்ட காவலர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலமாகக் கிடந்தவர், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் அருகே வசித்துவந்த சின்னபையன் மகன் குழந்தைவேலு (45) என்பது தெரியவந்தது.

 

கூலித்தொழிலாளியான அவர் மது குடித்துவிட்டு சுற்றித் திரிந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் தலையில் பலமாகத் தாக்கிக் கொலை செய்து, தண்டவாளம் அருகே சடலத்தை வீசிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. தலை, நெற்றி, கண் ஆகிய இடங்களில் கல் அல்லது கம்பியால் தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. நிகழ்விடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் சடலத்தில் இருந்த காயங்களின் அடிப்படையில் கொலையுண்ட நபருக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்சென்று நிர்வாணப்படுத்தி, கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஓரினச்சேர்க்கை அல்லது திருமண உறவுக்கு மீறிய தவறான தொடர்பால் ஏற்பட்ட முன்விரோதத்திலும் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இச்சம்பவம், கடந்த 15 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

 

கடந்த சில நாட்களாக குழந்தைவேலுவுடன் சுற்றித்திரிந்தவர்கள், அவருடன் மது அருந்தியவர்கள், கடைசியாக அவரைச் சந்தித்த நபர்கள், நண்பர்கள் ஆகிய விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்துவருகின்றனர். அவர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்த உள்ளனர். சடலம் கிடந்த இடத்திலிருந்து அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட் வரும் வழியில் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. 

 

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதற்கிடையே, சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்வும் நிகழ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 

 

ரயில்வே காவல்துறையினர் உள்ளூர் காவல்துறையினருடன் இந்த வழக்கை விசாரித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்