Skip to main content

வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு; கோவிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

4 women who were swept away flood while returning from temple lost their lives

 

நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகே உள்ள சீகூர் வனப் பகுதியில், பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை விசேஷ நாட்களில் மட்டுமே திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகம். அதற்கேற்ப, கார்த்திகை தீபத் திருநாளில் இந்த கோவில் திறக்கப்பட்டு பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்றது. இதையறிந்த உதகை, கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர். ஆனால், இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் வனப் பகுதியில் இருக்கும் ஆனிக்கல் ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும். 

 

இந்நிலையில், காலை நேரத்தில் ஆற்றுப்பகுதியில் குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில், பக்தர்கள் வெகுவாக கடந்து சென்றனர். அந்த சமயத்தில், மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆனிக்கல் ஆற்றுப் பகுதியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தனர். அதிலும், சிலர் ஒவ்வொருவராக ஆற்றைக் கடக்க முயன்றபோது ஜெக்கலொரை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா ஆகிய 4 பெண்கள் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சீகூர் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் இரவு சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 

 

அதன் பிறகு நேற்று காலை மீண்டும் மீட்புப் பணிகளைத் தொடங்கிய நிலையில் விமலா, சரோஜா, வாசுகி ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுசீலா என்ற பெண்ணின் உடலைத் தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” - முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Attention of owners of houses damaged by rain and flood 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

இவ்வாறு மழை வெள்ளத்தினால் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு ரூ. 2 இலட்சம் வரையும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த 955 வீடுகளுக்குப் பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ. 45.84 கோடி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

''அதெல்லாம் சரி... ''- எதிர்பார்த்து ஏமாந்த தூத்துக்குடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Modi did not open his mouth about it; Tuticorin is a disappointment

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடியில், நடைபெற்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 4,586 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.  தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னேற்றம் அடைந்த இந்திய வரைபடத்தின் எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த திட்ட முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் படகு சேவை காசியில் கங்கை நதியிலும் பயணிக்க இருக்கிறது. தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் விரிவுபடுத்தப்படும் என்ற எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலை பணிகளையும் இன்று தொடங்கி வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மத்திய அரசால் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன' என்றார்.

அண்மையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பேரிடர் காரணமாக மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான நிவாரணத்தை அறிவித்திருந்த போதிலும் மத்திய அரசிடமும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, அதற்கான நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கிட வேண்டும் என்று பல்வேறு வகைகளில் கோரிக்கை வைத்திருந்தது.

ஒரு கட்டத்தில் கோரிக்கையானது மோதலாக உருவெடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதிக்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழலில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, தேர்தல் கவனத்திற்காவது மத்திய அரசு சார்பில் வெள்ள நிவாரணம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எந்த அறிவிப்பும் பிரதமரின் பேச்சில் இடம் பெறாதது தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு மாவட்டமான நெல்லைக்கு தற்போது சென்றுள்ள மோடி, அங்கு உரையாற்றி வரும் நிலையில் 'அதெல்லாம் சரிதான்.. அங்காவது வெள்ள நிவாரணம் குறித்து வாய் திறப்பாரா?' என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.