Skip to main content

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பெண்கள் - உதகையில் சோகம்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

 4 women swept away by wild floods-sadness in the morning

 

உதகையில் கோவில் தீப விழாவிற்குச் சென்ற பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்ரீபூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆணிக்கால் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் திறக்கப்பட்ட நிலையில், சுற்றியுள்ள உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.

 

நேற்று மதியம் அந்தப் பகுதியில் இருந்த ஓடையில் குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில், நேற்று மாலை வேளையில் அந்த பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாகக் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்பொழுது ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க முயன்ற பொழுது சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா ஆகிய நான்கு பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

 

இது தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாயமான நான்கு பேரையும் தேடி வந்தனர். இரவு ஆகிவிட்டதாலும் ஆற்றில் ஓடும் நீரின் அளவு அதிகரித்ததாலும் மாயமான நான்கு பேரையும் தேடும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.