Skip to main content

வேன்- லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பெண்கள் பலி!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

4 women passed away in van-truck head-on collision

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் பக்கமுள்ள புதியம்புத்தூர் முப்புலிவெட்டி, நடுவக்குறிச்சி, சில்லாநத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் அருகிலுள்ள தூத்துக்குடி சிப்காட்டிலிருக்கும் தனியார் உலர் பூ தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகின்றனர். இதற்காக அவர்களை அந்த நிறுவனம் சார்பில் தினமும் காலையில் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு வேலை முடிந்து மாலை அதே வேன்களில் வீடு திரும்புவது அன்றாட நடைமுறை. நேற்று (10.09.2021) காலை 6.30 மணியளவில் முப்புலிவெட்டி, புதியம்புத்தூர், சில்லாநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி நிறுவனத்திற்கு அந்த வேன் சென்றது. வேனை புதியம்புத்தூரைச் சேர்ந்த பாபு என்பவர் ஓட்டியிருக்கிறார்.

 

புதியம்புத்தூர் - தூத்துக்குடி ரோட்டில் சில்லாநத்தம் கிராமம் அருகே மெயின் ரோட்டில் வேன் செல்லும்போது, எதிரே தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் நோக்கி வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேன் அப்பளமாக நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில் சில்லாநத்தம் செல்வராணி, முப்புலிவெட்டி கிராமத்தின் சந்தியா, சில்லாநத்தம் மேலத்தெருவைச் சேர்ந்த காமாட்சி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து அருகிலுள்ள கிராம மக்கள் விரைந்து வந்து காயம்பட்டோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி புதியம்புத்தூரைச் சேர்ந்த மணிமேகலை (20) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. 

 

4 women passed away in van-truck head-on collision

 

இந்த விபத்தில் லாரி டிரைவர் பண்டாரம், வேன் டிரைவர் பாபு, பேச்சியம்மாள், சில்லாநத்தம் ராமலட்சுமி, நடுவக்குறிச்சி வனிதா (19), பொன்இசக்கி (44), செல்வமுருகன், லிங்கம்மாள் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. பொன்னரசு, புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். தண்ணீர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய புதியம்புத்தூர் நயினார்குளத்தைச் சேர்ந்த பண்டாரம் மீது புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். கோர விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஓட்டப்பிடாரத்தின் சுற்றுவட்டாரக் கிராமங்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.