சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வெள்ளப்பம்பட்டி பகுதியில் மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த ஒரு மினிடோர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது. மேலும் அது கடத்தல் அரிசி என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், தொப்பூர் சுற்று வட்டாரத்தில் ரேஷன் கடைகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து கிலோ 3 ரூபாய்க்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு தீவனத்திற்காக கிலோ 6 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்ல இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தில் வந்த ஓட்டுநர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
பிடிபட்ட அனைவரும் சேலம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.