
சென்னை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்தபோது பயணிகளை இறக்குவதற்காகப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த கார் ஒன்றின் மீது பேருந்து உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் காரில் இருந்தவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதோடு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது காரில் இருந்தவர்கள் பலமாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மற்ற பேருந்து ஓட்டுநர்கள் அப்பகுதிக்கு வந்து சாலைகளில் பேருந்தை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் இடத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதேசமயம் இந்த சம்பவத்தில் காயமடைந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாகச் சட்டக்கல்லூரி மாணவி பிரதீபா ஷாலினி, அவரது கணவர் ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.