சென்னை மணலி பகுதியில் எம்எம்டிஏ குறுக்கு தெருவில் வசித்து வருபவர் உடையார். இவருக்குத் திருமணமாகி ஒரு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விபத்து காரணமாக உடையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குத் துணையாக அவரது மனைவி மருத்துவமனையில் தங்கி உடையாரை கவனித்து வருகிறார்.
இதனிடையே தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள அவரது பாட்டி சந்தான லட்சுமி மணலியில் உள்ள உடையார் வீட்டில் தங்கியிருக்கிறார். மேலும் அந்த மூன்று பேருடன் அவர்களது உறவுக்காரர் வீட்டிச் சிறுமியை அங்கேயே தங்கியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு மூன்று சிறுமிகள் மற்றும் பாட்டி சந்தான லட்சுமி ஆகிய 4 பேரும் வீட்டில் கொசு விரட்டி மருந்தை ஆண் செய்துவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். அப்போது கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தில் தீப்பற்றி உருகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தீப்பற்றி அட்டைப் பெட்டியில் விழுந்து தீப்பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியேறிய புகையால் வீட்டிலிருந்த 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பிய உடையாரின் மனைவி வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்தபோது வீட்டின் உள்ளே 4 பேரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடலை கைபற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர்கள் கொசு விரட்டும் மருத்துகளால்தான் உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.