Skip to main content

திருச்சியில் நடந்த கொலை; வெளியான திடுக்கிடும் பின்னணி

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

4 people, including a college student, were arrested in the  old lady case

 

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரா நகரை சேர்ந்த கருப்பண்ணனின் மனைவி ராஜேஸ்வரி (வயது 65). கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர் கடந்த மே மாதம் 17-ந் தேதி கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் உள்ளே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  மேலும் அவரது வீட்டில் இருந்த 63 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.  

 

இந்நிலையில் முசிறி அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களான தொட்டியம் வள்ளுவத்தெருவை சேர்ந்த சந்திரசேகரனின் மகன் கிருஷ்ணன் என்ற பில்லா(வயது 20), மணமேடு விஸ்வநாதன் மகன் ஆறுமுகம் என்ற நாட்டாமை (20), அலகரை ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ் (19) மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சித்தூர் ராஜாராமன் மகன் விக்ரம் (20) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.  

 

தொட்டியம் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்ற பில்லா, இவரது தாய் ஆனந்தி ஆகியோர் ராஜேஸ்வரியிடம் கடந்த பல, ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்று, திருப்பி அடைத்துள்ளனர். அப்போது கடனை தாமதமாக அடைத்ததால், ஆனந்தியை ராஜேஸ்வரி திட்டியதாக தெரிகிறது.  இதனை மனதில் வைத்துக் கொண்டு கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம், மோகன்ராஜ், விக்ரம் ஆகியோர் ஒன்று சேர்ந்து ராஜேஸ்வரியின் வீட்டை பல நாட்களாக நோட்டமிட்டுள்ளனர்.  சம்பவத்தன்று வீட்டில் ராஜேஸ்வரி தனியாக இருப்பதை அறிந்த அவர்கள், அவரிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அவர்களை பார்த்த ராஜேஸ்வரி சத்தம் போட்டதால், அவரது கழுத்தை நெரித்துள்ளனர் இதில் அவர் மயங்கினார்.  இதையடுத்து அவரது வாயில் துணியை திணித்து, கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 2 நாட்களுக்கு பிறகு பார்த்தபோது, அந்த வீடு திறந்து கிடந்ததை கண்ட அவர்கள், அன்று இரவு மீண்டும் அங்கு சென்றுள்ளனர். அப்போது ராஜேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது. 

 

இதையடுத்து அங்கு மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர்.  பின்னர் கொள்ளையடித்த நகைகளையும், பணத்தையும் 4 பேரும் பிரித்துக் கொண்டு கடந்த ஐந்து மாதங்களாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணன் தொட்டியத்தில் உள்ள ஒரு கடையில் நகையை அடகு வைத்தபோது, சந்தேகம் அடைந்த கடைக்காரர் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் வானப்பட்டறை அருகே கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவரது கல்லூரி நண்பர்கள் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்துள்ளனர்.  இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், முசிறி துணை சூப்பிரண்டு யாஸ்மின் ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைதான 4 பேரிடம் இருந்தும் மொத்தம் 38 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ஆகியவற்றை மீட்டதோடு, கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய கார், 86 கிராம் வெள்ளிப்பொருட்கள், ஒரு ஐ போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.