
தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த், வழக்கறிஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், நீதிமன்ற பணியாளர்கள் வாசு ராமநாதன், ஸ்ரீதர் குமார், உதயசூரியன், பாதுகாப்பு காவலர் நவீன்குமார் ஆகிய 6 பேர் இன்னோவா காரில் திருச்செந்தூரில் இருந்து இன்று காலை புறப்பட்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலகரந்தை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது இன்னோவா கார் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் இன்னோவா காரில் பயணித்த வழக்கறிஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், காவலர் நவீன் குமார், நீதிமன்றம் ஊழியர்கள் ஸ்ரீதர் குமார், வாசு ராமநாதன் ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியர் உதயசூரியன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற பணியாளரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஞான ஜெரீதா பிளவர், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. கிரிஜா, மோட்டார் இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் மாசிலாமணி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி