கள்ளக்குறிச்சியில்கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவம் தொடர்பாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.உயிரிழந்த சேகரின் மகன் தினகரன் என்பவர்அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்த சேகரின் மகன் தினகரன் அளித்த விவரத்தின்படி, 'கடந்த பதினெட்டாம் தேதி இரவு 7 மணியளவில் தனது தந்தை சேகர் எப்போதும் போல மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அடுத்த நாள் காலை9 மணியளவில் அவர் எழுந்த பொழுது கண்ணெரிச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனடிப்படையில் துருவம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தையின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த பொழுது அருகாமையில் இருக்கக்கூடிய சுரேஷ் என்பவரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தார் என்ற தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். இந்தச் சம்பவம் போல சுமார் 20க்கும் மேற்பட்ட எங்கள் ஊர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால் வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுகுட்டி என்கின்ற கோவிந்தராஜ் மற்றும் அவருடையதம்பி, அவருடைய மனைவி. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் அடிப்படையில் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த21 பேரை முதல்கட்டமாகதகனம் செய்வதற்கான தகன மேடை கோமுகி நதிக்கரையில் அமைக்கப்பட்டு வருகிறது.