Skip to main content

பொன்மலை ரயில்வே பணி மனையில் 3.5 டன் எடையுள்ள மோட்டார் திருட்டு!

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

3.5 ton motor theft at Ponmalai railway work site

 

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜீன்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் தற்போது 5 ஆயிரத்திற்கு அதிகமான வெளிமாநில மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த பணிமனையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரிக்கல், இஞ்சின் வடிவமைப்பு, ரயில் கட்டுமான பிரிவு  என்று பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் இல்லாமல் மற்ற பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களும் இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பணிமனைக்குள் இருந்து ஸ்க்ராப் என்று சொல்லக்கூடிய பழைய இரும்பு பொருட்கள் அனைத்தும் ஏலத்தில் எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் லாரி வந்துள்ளது. அந்த லாரியில் பணிமனையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது, இஞ்சினில் உள்ள மின் மோட்டாரையும் சேர்த்து ஒப்பந்த ஊழியர்கள் ஏற்றியுள்ளனர்.

 

அதன்பின் ஊழியர்கள் மின் மோட்டாரை காணவில்லை என்று கூறி தேட ஆரம்பித்தபோது, பணிமனைக்குள் வந்துவிட்டுச் சென்ற லாரிகள் எது என்று அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டபோது, சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அந்த லாரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் அந்த லாரி எது என்று கண்டுபிடித்து அந்த லாரியை ஓட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் அந்த லாரி கோவையைச் சேர்ந்தது என்றும், அதனை ஓட்டி வந்தவர்கள் கோபால்(30), மணிகண்டன்(29) ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை கைப்பற்றி சோதனை செய்ததில் அவர்கள் 3.5 டன் எடையுள்ள 2 மோட்டார்களைத் திருடிச் சென்றுள்ளனர். ஒரு மோட்டாரின் விலை 25 லட்சம் ரூபாய் எனவும், 2 மோட்டார்கள் 50 லட்சம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அவர்களைக் கைது செய்த ரயில்வே காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் மின் மோட்டாரை திருடிச் செல்லும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரண், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலீஸ்காரர் சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் இரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.