Skip to main content

58 ஆயிரம் விவசாயிகளுக்கு 333 கோடி ரூபாய் பயிர்க்கடன்! 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

333 crore rupees crop loan for 58 thousand farmers!

 

சேலம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் இதுவரை 58 ஆயிரம் விவசாயிகளுக்கு 333 கோடி ரூபாய் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. 

 

சேலம் மாவட்டத்தில் 203 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 5 'லேம்ப்' கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை, 40,128 விவசாயிகளுக்கு 260.32 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 18,083 விவசாயிகளுக்கு 73.24 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்புக் கடனும் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, மொத்தம் 58 ஆயிரத்து 211 விவசாயிகள், 333.56 கோடி ரூபாய் வரை வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன்களைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். 

 

கேசிசி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில், 1.60 லட்சமும், சொத்து பிணையத்தின்பேரில் 3 லட்சம் ரூபாய் வரையிலும் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. கறவை மாடு பராமரிப்பிற்காக மாடு ஒன்றுக்கு 14 ஆயிரமும், அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது. உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, கடனுக்கான வட்டியே அரசே ஏற்றுக் கொள்கிறது. 

 

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. அத்துடன் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், நிலத்தின் கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, கடன் சேவைகளைப் பெறலாம். 

 

உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் படிவத்தைப் பெற்று 110 ரூபாய் பங்குத்தொகை, நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து, அனைத்து வகையான கடனுதவிகளையும் பெற்று பயன் அடையலாம். உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத அனைத்து விவசாயிகளும் கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரங்களை பெற்றுக் கொள்ள முடியும். 

 

மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக் கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், பெண் தொழில்முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கடன் உள்ளிட்ட 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை விவசாயிகள், உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, கூட்டுறவு கடன் சங்க சேவைகளைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

 

சேவை குறைபாடுகள் இருப்பின், சேலம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் - 0427 2415158, சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களான சேலம் - 0427 2452011, ஆத்தூர் - 04282 24060, ஓமலூர் - 04290 222959, சங்ககிரி - 04283 243600 ஆகிய அலுவலக எண்களில் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.