ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் டீக்கடைக்காரர் ஒருவரின் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் தங்கநகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை சில மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மின் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் கோபி நீதிமன்றம் அருகே தேநீர்க் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 26 ந்தேதி காலை துரைராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் வெளியூர் சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் வீட்டின் பின்பக்க கதவு உடைந்த நிலையிலிருந்துள்ளது.
இதையடுத்து படுக்கையறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் தங்கநகை மற்றும் 60 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு உடைக்கப்பட்ட நிலையிலிருந்த பீரோ மற்றும் கதவுகளைப் பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்ப நாய் வரவழைத்து கொள்ளையர் விட்டுச்சென்ற தடயங்களைச் சேகரித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். கோபியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.