
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (22.02.2025) உரிய அனுமதிச் சீட்டு பெற்று 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு இன்று (23.02.2025) அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடிக்கும், வடக்கு மன்னார் கடற்பரப்புக்கும் இடையே கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு அதோடு மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மீனவர்கள் கைது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வரும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் இன்றும் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில், ' நடப்பாண்டில் மட்டும் 116 மீனவர்கள், 16 படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காண கூட்டுப் பணிக்குழு கூட்டத்தினை உடனடியாக கூட்ட வேண்டும். இதன் மூலம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது' என தெரிவித்துள்ளார்.