Skip to main content

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு 

Published on 27/03/2018 | Edited on 27/03/2018

 

court

 

தமிழகத்தில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 32 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக காவல் துறையும்,தமிழக அரசும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தாமலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமலும் உள்ளதாகக் கூறி, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.க்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ரோசன் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி ஏ.செல்வம், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, உலகளவில் 4.58 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளதாகவும், அதில் இந்தியாவில் 1.83 கோடி பேர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும் 2016ம் ஆண்டு சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டிய மனுதாரர், கொத்தடிமைகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்ட போதிலும், 32 வழக்குகளில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

 

இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசும்,தமிழக காவல்துறையும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

‘16 வருடமாகப் பார்த்து வந்த வேலை நாளையிலிருந்து இல்லை’ - பணியாளர்கள் கவலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Trichy 120 sanitation workers sacked from tomorrow

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காகத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததைக் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.