Skip to main content

அ.தி.மு.க பிரமுகர் பாரில் பதுக்கி வைத்திருந்த 3031 மது பாட்டில்கள் பறிமுதல்.. அ.தி.மு.கவினர் என்பதால் நடவடிக்கை எடுக்க தயக்கம்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

தேர்தல் நடத்தை விதிகளின்படி கலவரங்கள் நடக்க மதுவும் மிக முக்கிய காரணமாகிறது என்பதால் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பே மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி திங்கள்கிழமை இரவு 10 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக கணக்கு காட்டிவிட்டு நள்ளிரவு தாண்டியும் பெட்டி பெட்டியாக மது விற்பனை நடந்தது. 

 

tasmac


    
அதேபோல புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள கல்லுப்பள்ளம் என்ற கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அனுமதி இல்லாமல் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்ற அ.தி.மு.க பிரமுகர் நடத்தி வரும் பாரில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பாட்டில்கள் தேர்தல் நாளில் வாக்காளர்களுக்கு கொடுக்கவா? அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவா என்பது தெரியவில்லை என்று அந்த பகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.

    
நள்ளிரவை தாண்டிய பிறகு சம்மந்தப்பட்ட அனுமதியில்லாத பாரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன், மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அதில் 112 பெட்டிகளில் பல்வேறு ரகங்களில் 3031 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து அனைத்தையும் அள்ளிச் சென்று ஆலங்குடி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், ஆலங்குடி மதுவிலக்கு போலீசார், மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்கள் ஓடிவிட்டனர். யாருடையது என்பது தெரியவில்லை என்று தெரிவித்தனர். சின்னத்துரை அ.தி.மு.க பிரமுகர் என்பதால் அவர் மீது மேலிட அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்ய மறுத்து வருகின்றனர் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.
 

    
இது குறித்து கல்லுப்பள்ளம் இளைஞர்கள் கூறும்போது, “இது புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் பார்வையில் உள்ள டாஸ்மாக் கடை. அதனால் இதுவரை மாத மாமூல் கொடுத்த சின்னதுரை தேர்தல் நேரத்தில் விடுமுறையில் மது விற்பனை செய்வதால் ஒரு நாளைக்கு மதுவிலக்கு போலீசாருக்கு மட்டும் சுமார் ரூ. 25 ஆயிரம் வரை மாமூல் பேசி உள்ளார். அதேபோல சம்மந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் அதிகாரிகளுக்கும் மற்ற துறை சார்ந்தவர்களுக்கும் வழக்கமாக கொடுக்கும் மாமூலைவிட 3 விடுமுறை நாட்களுக்கும் கூடுதல் மாமூல் கொடுக்கிறார். அதனால்தான் அவர் பெயரை வழக்கில் சேர்க்க தயக்கம். இனி யாராவது ஒரு வேலைக்காரரை மது பாட்டில்களை பதுக்கி வைத்ததாக வழக்கு போட்டு முடித்துக் கொள்வார்கள். திருடனை தப்பவிட்டு யாரோ ஒருவரை ஒரு நாள் சம்பளம் வாங்கும் நபரை பிடிக்கிறதுக்கு தான் போலீசார்” என்று நொந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.