திடீரென பெய்த மழை; மின்சாரம் தாக்கி 30 ஆடுகள் பலி

30 goats lost life by electric shock in Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ஆனைமல்லூர் கிராம பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்த்து கொண்டிருக்கும் பொழுது திடீரென பெய்த மழையின் காரணமாக அங்கிருந்த மரத்தின் அடியில் ஆடுகள் ஒன்று கூடி நின்றுள்ளது.

இந்த திடீர் மழையின் போது வீசிய பலத்த காற்றின் காரணமாக ஆடுகள் நின்றிருந்த மரத்தின் கிளைஉடைந்து விழுந்தது. அப்போது மேலே சென்றிருந்த மின்சார ஒயர் அறுபட்டு ஆடுகளின் மீது விழுந்ததில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக் கண்ட ஆடுகளின் உரிமையாளரான சங்கர் மற்றும் பொதுமக்கள் மின்வாரிய பணியாளர்களுக்கு தகவலை தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திமிரி காவல் நிலையம் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.

மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற 30 ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் விவசாயி சங்கர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

goat rain
இதையும் படியுங்கள்
Subscribe