Skip to main content

“உழைக்காமல் சொகுசாக வாழத் திருடினோம்” - வசமாக சிக்கிய இளைஞர்கள்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

3 youths arrested for stealing batteries in Gudiyatham area

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  சித்தூர்கேட்  பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான பேட்டரி கடையை அன்சர் பாஷா என்பவர் வைத்து நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவர் கடையில் வைத்திருந்த பேட்டரிகள் திருடு போயிருந்தது.

 

இதனால் அதிர்ச்சியானவர் இதுகுறித்து அப்பகுதி கடைகளில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தபோது, இவரது கடையில் இருந்து சிலர் பேட்டரிகளை மூட்டை கட்டி எடுத்துச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தனக்கு தெரிந்தவர்களிடம் சக தொழில் செய்பவர்களிடம் அன்சர் பாஷா வேதனையுடன் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் சிலர் பேட்டரிகளை விற்க வந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. உடனே அன்சர் பாஷா தனது கடை ஊழியர்களுடன் சென்று பார்த்தபோது அவரது கடையில் திருடிய பேட்டரிகள் எனத் தெரிய வந்தது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பேட்டரி திருடிய 3 பேரை பிடித்து குடியாத்தம் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குடியாத்தம் அடுத்த கள்ளூர் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அமீன் (22), சித்திக் (22), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த அக்பர் (20) என்பது தெரிய வந்தது. இளம் வயதில் திருடியது குறித்து போலீஸார் கேட்டபோது, என்ன வேலை செய்தாலும் எங்களுக்கு போதுமான அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. அதனால் வேலையே செய்யாமல் சொகுசாக வாழ திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டால் நன்றாக பணம் வரும் என்பதனைத் தெரிந்துகொண்டு திருட முயற்சி செய்தோம். தெரிந்தவர் ஒருவருக்கு பேட்டரி வாங்க முயன்றபோது அது நல்ல விலைக்கு விற்பது தெரிந்தது. அதைத் திருடி விற்றால் பாதி விலை வந்தால்கூட போதும் என்பதால் இந்த முறை பேட்டரிகளை திருட முயற்சி செய்தோம் எனச் சொல்லியுள்ளார்கள். 

 

இதையடுத்து 3 பேரையும் குடியாத்தம் நகர போலீசார் கைது செய்து இவர்கள் வேறு எங்கெல்லாம் திருடியிருக்கிறார்கள். இவர்கள் பின்னணி என்ன போன்றவற்றை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.