புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்துத் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி நகை கொள்ளை, வழிப்பறி, கோயில் உண்டியல்கள் உடைப்பு எனத் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கீரமங்கலம் காவல் சரகத்தில் உள்ள கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், கொத்தமங்கலம் கூலாட்சி கொல்லை காமாட்சியம்மன் கோயில் உண்டியல்கள் உடைத்துத் திருடப்பட்டிருந்தது. இதே போல இன்று (29.06.2025) மாலை சேந்தன்குடி பெரியாத்தாள் ஏரிக்கு வடக்குப் பக்கம் உள்ள புதருக்குள் ஒருசில்வர் உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொதுமக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது நகரம் காளியம்மன் கோயில் உண்டியல் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, கீரமங்கலம் காவல் சரகத்தில் மட்டும் நேற்று முன்தினம் (27.06.2025) ஒரே இரவில் 3 ஊர்களில் 3 கோயில் உண்டியல்களை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர். இதனால் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறையினர் கைரேகை பதிவுகளைச் சேகரித்துள்ளனர்.