Skip to main content

வாணியம்பாடியில் கோர விபத்து; பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பலி

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

3 school students passed away in a road accident in Vaniyambadi

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள சில கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கிரிசமுத்திரம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து படித்து வருகின்றனர்.

 

கூலித் தொழிலாளியான சாமுவின் 13 வயது மகன் ரபீக் 8 ஆம் வகுப்பும், ராஜியின் மகன் விஜய் 8 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். ராஜியின் மற்றொரு மகனான சூர்யா 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு ரபீக் ஒரு சைக்கிளிலும் அண்ணன் தம்பிகளான விஜய், சூர்யா இருவரும் ஒரு சைக்கிளில் சென்னை டூ பெங்களூரு தேசிய நாற்கர சாலையின் சர்வீஸ் சாலையில் ஜாலியாக பேசிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது வேலூரிலிருந்து ஏலகிரிக்கு கர்நாடகா பதிவு எண் கொண்ட சிவப்பு கலர் கார் ஒன்று சிறுவர்கள் சென்ற சைக்கிள் மீது மோதியது. இரண்டு சைக்கிளில் சென்ற மூன்று சிறுவர்களும் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் சாலையின் ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. அதிலிருந்து 4 இளம்பெண்கள், 3 இளைஞர்கள் இறங்கி தள்ளாடியபடி தப்பி ஓட முயன்றுள்ளனர். விபத்தைப் பார்த்து அதிர்ச்சியான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். கார் ஓட்டி வந்த சந்தோஷ் என்பவரை பிடித்து சரமாரியாக தாக்கியவர்கள், அவர்கள் தப்பி போகாமல் பிடித்து வைத்துள்ளனர். இறந்து போன சிறுவர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து கண்ணீரோடு ஓடி வந்தவர்கள் சாலையில் இறந்து கிடந்த தங்களது குழந்தைகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். கோபமான அப்பகுதி பொதுமக்கள், உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி பாலகிருஷ்ணன், திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, வாணியம்பாடி ந.செ. சாரதிகுமார் நேரில் வந்து குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களை சமாதானம் செய்தனர். பொதுமக்களை சமாதானம் செய்த போலீசார் சாலை மறியலை கைவிட செய்தனர். இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 3 சிறார்கள் மீது மோதிய காரில் வந்தவர்கள் வேலூர் காட்பாடியில் உள்ள பிரபல நிகர்நிலை பல்கலைக்கழகம் விஐடியில் படித்துக்கொண்டு இருப்பவர்கள் என்பதும், மது விருந்திற்காக சுற்றுலாத் தலமான ஏலகிரிக்கு சென்றுகொண்டிருந்தார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. கார் ஓட்டி வந்த இளைஞன் சந்தோஷ் அந்த பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி படித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. மற்றவர்கள் குறித்த தகவலை அப்படியே காவல்துறை மறைத்துவிட்டது.

 

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி மலை இப்போது பணக்காரர்களின் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. இங்கு வந்து ஹோட்டல்களில், ரிசார்ட்டுகளில் ரூம் போட்டுவிட்டு குடி, கும்மாளம் போடுபவர்கள் போதை பவுடர்களை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அப்படி வரும் சென்னை, வேலூர், பெங்களுரூவைச் சேர்ந்த பணக்கார இளைஞர்கள், ஐடி இளையோர்கள் தாறுமாறாக கார், பைக் ஓட்டுவது வாடிக்கை. இவர்களின் வாகனங்கள் மற்றவர்கள் மீது மோதி இறப்பு வரை செல்கிறது அல்லது அவர்களது வாகனங்கள் சாலை தடுப்புகளின் மீது மோதி இறந்து போகிறார்கள். கார் ஓட்டுநர்கள் பெரும்பாலும் மருத்துவ பரிசோதனையின் போது போதையில் இருக்கிறார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

மேலும், ஏலகிரி மலையில் உள்ள விடுதிகள், ஹோட்டல்களில் ரெய்டு செய்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் கும்பல்களை தடுத்தால் போதையில் தாறுமாறாக கார்களை ஓட்டிக்கொண்டு வருபவர்கள் குறைவார்கள். இதுபோன்ற போதையால் நடக்கும் விபத்துகளும் ஏதும் அறியாத இதுபோன்ற சிறார்கள் இறப்பும் குறையும் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதல் திருமணம்; காவல் நிலையத்தின் முன்பு நடந்த மோதலால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
 Excitement due to the previous conflict at the police station for love marriage

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, திம்மம்பேட்டை அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே, இவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த 21 வயதான அபிநயா ஶ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த, பெண் வீட்டார், அந்த பெண்ணிடம் காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த 24 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி பழனி சென்று அங்குள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் பொள்ளாச்சி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 26 ஆம் தேதி பெண்ணின் பெற்றோர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், காதலர்களின் செல்போனை எண்ணை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து, காதலர்களின் செல்போன் சிக்னலை வைத்து பொள்ளாச்சியில் தங்கியிருந்தவர்களை போலீசார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் இருவரும் ஒன்றாக செல்வதாக விருப்பம் தெரிவித்ததால், போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.