Skip to main content

பெண் தற்கொலை வழக்கில் 3 போலீசார் பணியிடமாற்றம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

3 policemen transferred in the case of female

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா(36). இவர், கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். அருகில் ஒரு நோட்டு தாளில் தன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அதிகாலையில் வந்து இழுத்துச் சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் சாகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

 

இந்த சம்பவத்தில் கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரில் திமுக பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவி புவனேஸ்வரி, கீரமங்கலம் காவல் நிலையம் எஸ்.ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி மற்றும் கீரமங்கலம் காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் என 6 பேர் தன் மனைவி தற்கொலைக்கு காரணமானவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

 

நடவடிக்கை கோரி உறவினர்கள், அரசியல் கட்சியினர் மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் நீலகண்டன் கொடுத்த புகாரையும் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யும் வரை பிரேதப் பரிசோதனைக்கு போகமாட்டோம் என்று கூறினார்கள். இந்த நிலையில், நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் கோகிலா வீட்டிற்கு விசாரணைக்கு வந்து காத்திருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கும் வரை விசாரணைக்கு வரவில்லை என உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

 

தொடர்ந்து நேற்று மாலை அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் மீதும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதை உறவினர்கள் கோரிக்கையாக முன் வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்த பிறகு சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

 

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கோகிலாவின் அருகில் இருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கீரமங்கலம் எஸ்.ஐ ஜெயக்குமார் மீமிசலுக்கும், பெண் போலீஸ் கிரேசி மணமேல்குடி, புவனேஸ்வரி நமணசமுத்திரம் ஆகிய காவல் நிலையத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை செய்யும் காவல் அதிகாரி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.