Skip to main content

போலி ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழுடன் விமான நிலையத்தில் சிக்கிய 3 நபர்கள்! 

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

 3 people trapped at the airport with Fake RTPCR certificates

 

உலகம் முழுவதும் உருமாறிய கரோனாவான ஒமிக்ரான் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல்வேறு நாடுகள் சர்வதேச விமான எல்லைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன.

 

ஆனால் இந்தியாவில் இதுவரை சர்வதேச விமான எல்லைகள் மூடப்படவில்லை. அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அனுமதிக்கப்படுகிறனர். அதில் மிக முக்கியமானது ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ். ஆனால், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் ஒரு சிலர் போலியான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை காண்பித்து வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வர ஆரம்பித்துள்ளனர்.

 

இந்நிலையில், நேற்று (16.12.2021) இரவு சிங்கப்பூர், கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் தஞ்சை, தென்காசி, மாயவரம் உள்ளிட்ட 3 ஊர்களைச் சேர்ந்த 40 வயதிற்கு மேல் உள்ள 3 பேர் போலியான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளோடு வந்துள்ளனர். QR கோடுகளை ஸ்கேன் செய்து பார்த்ததில் அந்த முடிவுகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனை முடிவுகளைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதற்கு முன்பு பயணம் செய்த பயணிகளின் பரிசோதனை முடிவுகளைப் போலியாக மாற்றி தங்களுடைய பெயரில் மாற்றி அமைத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பயணிகளையும் விமான நிலையத்திற்குள் உள்ள தனியார் ஆய்வகம் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 

போலியான பரிசோதனை முடிவுகளோடு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் பயணிகளால் ஒமிக்ரான் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது