Skip to main content

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தாளாளர் உள்பட மூவர் கைது

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

3 people including school principal in Nellai were arrested by POCSO

 

நெல்லையின் மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் செல்கிற சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அக்கம்பக்கமுள்ள பகுதிகளின் சுமார் 900 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த குதுபுதீன் நஜீம் என்பவர் அப்பள்ளியின் தாளாளராக உள்ளார். காதர் அம்மாள் பீவி இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.

 

இந்நிலையில், தாளாளர் குதுபுதீன் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து உடல் வலிப்பதாகக் கூறி கை கால்களை அமுக்கிவிடுமாறு கூறி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், நடந்ததை வெளியே சொன்னால் ஃபெயில் ஆக்கிவிடுவதாக அவர்களை மிரட்டியும் வந்துள்ளாராம். இச்சூழலில் கடந்த 4ம் தேதியன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மூன்று மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்த தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது. இதனால் பீதியடைந்த மாணவிகள் சகமாணவிகளிடம் தெரிவிக்க, அதிர்ந்து போன மாணவிகள் நியாயம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், பாலியல் தொந்தரவு சம்பவம் மூன்று மாதங்களாக நடந்ததாகவும் தகவல்கள் கசிகின்றன.

 

3 people including school principal in Nellai were arrested by POCSO
தாளாளர் குதுபுதீன் நஜீம்

 

மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் பற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் முஸ்லீம் அமைப்பினர் திரண்டு வந்து நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பவ இடம் வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள், முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

இது குறித்து பாளை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி உள்ளிட்ட போலீசார் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீமை பிடித்து விசாரணை நடத்தியதின் அடிப்படையில் தாளாளர் குதுபுதீன் நஜீம், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் காதர் அம்மாள் பீவி, தாளாளரின் மனைவி உட்பட மூன்று பேர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பாகக் காணப்பட்ட மேலப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.