Skip to main content

டெட்டனேட்டர் வெடித்து 3 பேர் பலி; சோதனையின் போது ஏற்பட்ட விபரீதம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

3 passed away in Tenkasi detonator blast

 

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால். இவர் தனக்குச் சொந்தமான ஊருக்கு மேற்புறமுள்ள இடத்தில் புதிய கிணறு தோண்ட முடிவு செய்து, காளத்திமடத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் குத்தகைக்கு விட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக கிணறு தோண்டும் பணி நடந்திருக்கிறது. 15 அடி ஆழம் கிணறு தோண்டப்பட்ட நிலையில் கீழே இறுகலான பாறை தென்படவே தோண்ட சிரமப்பட்டிருக்கின்றனர்.

 

இதனையடுத்து பழக்கப்படி பாறைகளை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர். நேற்று காலை தொழிலாளிகளான ஆசீர் சாலமோன் (26) அரவிந்த் (24) ராஜலிங்கம் (56) அவரது மகன் மாரிச்செல்வம் (27) ஆகியோர் சேர்ந்து கிணற்றின் மேல் பகுதியில் அமர்ந்து பாறைகளைப் பிளக்கிற ஹெவி டெட்டனேட்டர்களை வைப்பதற்காக சோதனை செய்திருக்கிறார்கள். அது சமயம் சற்றும் எதிர்பாராமல் டெட்டனேட்டர்கள் வெடித்துச் சிதறியிருக்கிறது. இந்த விபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பலியாக ஆசீர் சாலமோன், ராஜலிங்கம், மாரிச்செல்வம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

 

தகவலறிந்த தென்காசி ஏ.டி.எஸ்.பி. சார்லஸ் கலைமணி, தடயவியல் இயக்குநர் ஆனந்தி, ஆலங்குளம் வட்டாட்சியர் (பொறுப்பு) ஒசன்ன பெர்னான்டோ, ஆலங்குளம் டி.எஸ்.பி.சகாய ஜோஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். காயமடைந்த ஆசீர் சாலமோன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். ராஜலிங்கம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிற வழியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மூன்றானது. படுகாயமடைந்த மாரிச்செல்வம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கிறார். போலீசார் விசாரணையை மேற்கொண்டனர் வெடி விபத்து தொடர்பாக காண்ட்ராக்டரும் குத்தகைதாரருமான சக்திவேலை ஆலங்குளம் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

3 passed away in Tenkasi detonator blast

 

அரசின் விதிப்படி கிணறு தோண்டுவதற்கான முன் அனுமதியை ஒன்றிய அலுவலகத்தில் முறைப்படி பெறவில்லை. விதியும் மீறப்பட்டுள்ளன. இறுகலான பாறைகளைப் பிளப்பதற்காக ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் வைக்கப்பட்ட டெட்டனேட்டர்களில் மூன்று டெட்னேட்டர்கள் மட்டும் வெடிக்கவில்லையாம். மற்றவை வெடித்துள்ளனவாம். அதுபோன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நேற்று முன்தினம் காலை (பிப் 16) டெட்டனேட்டர்களை குழிகளில் வைப்பதற்கு முன்பாக நான்கு பேரும் டெட்னேட்டர்களை சோதனை செய்து பின் வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் விபரீதம் புரியாமல், கிணற்றின் மேல் பகுதியில் சிறிய பேட்டரி உதவியுடன் சோதனை செய்திருக்கிறார்களாம். இந்த விபரீத சோதனையில் தான் பேட்டரியின் இணைப்பு பட்டு திடீரென டெட்டனேட்டர்கள் மொத்தமாக வெடித்து பெரிய விபரீதம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். வெடி விபத்தில் இறந்தவர்கள் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறியழுதது சோகத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது. விபரீத சோதனை பேராபத்தில் முடிந்திருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.