3 passed away fall into sewage tank

மதுரை மாநகராட்சி 70வது வார்டு நேரு நகரில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் வெளியற்றும் தொட்டியில் இறங்கி கழிவு நீர் அடைப்பை சரி செய்யும் பணியில் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், மாடகுளம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் சரவணன் ஆகிய 3 மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் எதிர்பாராத விதமாக கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று பேரும் விஷவாய்வில் சிக்கித் தவித்தனர்.

Advertisment

மூச்சுத்திணறலால் தொடர்ந்து அவர்கள் சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு இருந்தவர்கள், தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 பேரையும் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் என்பவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அணிஸ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.