Skip to main content

கிரடாய் அமைப்பு சார்பில் 3 நாட்கள் வீடுகள் கண்காட்சி

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

3 days house exhibition organized by credai organization

 

திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2022 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி  ஆகஸ்ட்13 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருச்சியில் நடைபெற உள்ளது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் கட்டுமானத் துறையில் கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) முக்கிய அங்கமாக உள்ளது.

 

அனைத்து வகையான மக்களுக்கும் சிறப்பான முறையில் வீடுகளை கட்டித் தருவதற்காக 1999-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், இந்திய அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் ஒரு அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வீடுகளின் கண்காட்சி, தற்போது 7-வது ஆண்டாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ‘ஃபேர்ப்ரோ-2022 என்ற பெயரில் ஆகஸ்டு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

 

திருச்சி கிரடாய் அமைப்பு குறித்து அதன் தலைவர் ஆர்.எஸ்.ரவி கூறியதாவது, “மக்களுக்கு வீடுகள் குறித்த தொழில்நுட்ப விழிப்புணர்வை உருவாக்குதல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வீட்டில் செய்ய வேண்டிய வழிமுறைகள், கட்டிடத்தின் பரப்பளவைக் கணக்கிடுதல், இடத்தின் சட்டப்பூர்வ ஆவணங்களை ஆராய்தல் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுதல் போன்றவையே கிரடாய் அமைப்பின் முக்கிய நோக்கம்.  சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் 9  இடங்களில் கிரடாய் அமைப்பு உள்ளது.

 

இதில், எங்களது திருச்சி அமைப்பில் 50க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும், இந்த அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள நடத்தைக் குறியீடு (Code Of Conduct), வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றைப் பின்பற்றுவார்கள். ஒவ்வொரு மீட்டிங்கின் போதும் இதை உறுப்பினர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.  அதனால், எங்களால் வீடுகள் தரமானதாகவும், உரிய நேரத்திலும் கட்டித் தரப்படுகின்றன.  வாடிக்கையாளர்களுக்கு வீடுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு, எங்கள் அமைப்பில் புகார் தெரிவித்தால் அதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 

 

இதன் மூலம் வீடு வாங்குபவர்களும் பாதுகாப்பாக உணர்வார்கள்.  மேலும், அரசு புதிய விதிமுறைகளை வகுக்கும்போது, எங்களது தேசிய மற்றும் மாநில அமைப்புகள் மூலமாக உடனடியாக எங்களுக்கு தெரியவந்துவிடும். அதை உடனடியாக நாங்கள் அமல்படுத்துவதுடன், எங்களது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி, மக்களுக்கும் கொண்டு சேர்த்துவிடுகிறோம்.  மானியத்துடன் அரசு அறிவிக்கும் வீடு கட்டுவதற்கான திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அத்திட்டத்தில் உள்ள வட்டி வீதம், சிறப்பு சலுகைகள் குறித்து வங்கிகளிடம் கேட்டறிந்து வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கிறோம். அரசுத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாகவே செயல்படுகிறோம்.  மேலும், கட்டுமான தொழிலில் உள்ள எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.

 

வழக்கமான 80-சி பிரிவின் கீழ் கிடைக்கும் சலுகைகளும் பொருந்தும். நடைமுறைக்கு வந்துள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தொடர் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் வருங்காலங்களில் நிச்சயம் வீடுகளின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அதே சமயம்  குறைந்த வட்டி விகிதம், வங்கிகளின் சலுகைகள், மத்திய அரசின் மானியம் உள்ளிட்ட பல்வேறு சாதகமான சூழ்நிலைகளால் சொந்த வீடு வாங்குவதற்கு இதுவே சரியான தருணம். அதற்கான வாய்ப்பை கிரடாய் திருச்சி 3 நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.  இதன் மூலம் குறைந்த விலையில் தரமான நம்பிக்கையான வீடுகள் வாங்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

 

திருச்சி கிரடாயின் சேர்மன் வி. கோபிநாதன் கூறியதாவது, “7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை 30 நிறுவனத்தினர் காட்சிப்படுத்த உள்ளனர். எங்களுக்கு வீடுகளை விற்பதற்கு இணையதளம், செய்தித்தாள், விளம்பரம் என பல வழிகள் உள்ளன. ஆனால், வீடு வாங்குபவர்களுக்கு எங்கு வீடுகள் உள்ளன? யாரிடம் வாங்குவது என தெரியாது. எனவே, வாடிக்கையாளர்களுக்கான சேவையாகத் தான் இக்கண்காட்சியை நடத்துகிறோம்.

 

கிரடாய் அமைப்பில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால், என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் எங்கள் கண்காட்சியில் உள்ளன. வங்கியில் கடன் கேட்டு கிடைக்குமா என தெரியாமல் காத்திருப்பதைவிட இக்கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டிவீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெற முடியும். 

 

மேலும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ள வீடுகள் அனைத்தும் வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்டவை. இதற்காக 5 வங்கிகள் இங்கு முகாமிட்டுள்ளன. அவர்களிடம் உங்களது வருமானத்தின் அடிப்படையில் கடனுதவி பற்றி கேட்டுவிட்டு, பின்னர் வீடு வாங்குவதற்கான பட்ஜெட்டை தயார் செய்யலாம். வீடு வாங்குபவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

 

இந்த கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு எங்களது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றனர். முறையான கட்டிட அனுமதி, தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வீடுகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இங்கு தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் உள்ளன” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.