இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை; விசாரணையில் பகீர்!

3 arrested for selling cannabis through Instagram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் சிவான்யா தலைமையிலான போலீசார் இளையாங்கன்னி கூட்டுச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

நான்கு பேரும் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். அப்போது விஷ்வா என்ற இளைஞர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து மீதமிருந்த 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் 4 இளைஞர்களும் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்,பிரதாப்,விஷ்வா மற்றும் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் ரகசிய பெயரைக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, பிரவீன், பிரதீப் மற்றும் சஞ்சய் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார் தப்பியோடிய விஷ்வாவை தேடி வருகின்றனர்.

Cannabis kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe